கேட்கும் வரம் அருளும் குலசை முத்தாரம்மன் கோயில் வரலாறும் சிறப்புகளும்
திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரிசெல்லும் கடற்கரை நெடுஞ்சாலையில், திருச்செந்தூரிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் குலசேகரன்பட்டினம் என்னும் பேரூரில், கடற்கரைக்கு அருகில் சுவாமி ஞானமூர்த்தீசுவரருடன் அன்னை முத்தாரம்மன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்குத் தன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருளிய இடமே தற்போது கோயில் அமைந்திருக்கும் இடம் ஆகும். எனவே அந்த மன்னனின் பெயரால் இவ்வூர் குலசேகரன்பட்டினம் என அழைக்கப்படலாயிற்று.
சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் ஒன்றாக அருள்பாலித்து, வேண்டி வருவோருக்கு கேட்கும் வரங்களை வழங்கி வருகிறார். சிறப்பு மிக்க குலசை முத்தாரம்மன் கோயிலின் சிறப்புகளையும் வரலாற்றையும் தெரிந்துகொள்ளலாம்.
வணிக தொடர்பு:
குலசேகரப்பட்டினம் இயற்கைத் துறைமுகமாக சிறப்புற்றிருந்த காலத்தில் இலங்கை, சிங்கப்பூர், பர்மா போன்ற அயல் நாடுகளோடும் மும்பை, கொல்கத்தா, கள்ளிக்கோட்டை போன்ற பெருநகரங்களோடும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது.
நவதானியங்கள், தேங்காய், எண்ணெய், மரம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டும், உப்பு, கருப்புக்கட்டி போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது. பாண்டிய மன்னர்கள் அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இத்துறைமுகம் வழியாக இறக்குமதி செய்தனர்.
அன்னையின் அருளாட்சி:
அன்னையின் அருட்பார்வையால் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் சிறப்புற்று விளங்கியது. இத்தொழிலைச் செய்யும் பெருமக்கள் இன்றும் பெருஞ்செல்வந்தர்களாக இருந்து அன்னைக்கு அரும்பணி செய்து வருகின்றனர்.
தங்க நாணயங்கள் அச்சிடும் அக்கசாலைகள் இருந்ததற்குச் சான்றாக அக்கசாலை விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது எண்ணத்தக்கது. பொருளாதாரத்திலும் வரலாற்றிலும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள இந்நகரம் அன்னையின் அருளாட்சியால் இன்று சீரோடும் சிறப்போடும் திகழ்ந்துவருகிறது.
புராணக் கதை:
குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன் முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.
"பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன் நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன?" மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான். கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது.
முத்தாரம்மனின் ஆதி பெயர்:
முத்தாரம்மனின் ஆதி பெயர் தட்டத்தி அம்மனாகும். அம்மனுக்கு கோபம் வரும் சமயம் ஊரில் உள்ள மக்களுக்கு முத்து வாரி போடுவது தட்டத்தி அம்மனின் வழக்கம். அவ்வாறு முத்துவாரி போடுவதால் அம்மனுக்கு முத்தாரம்மன் என்று பெயர் மாற்றப்பட்டது. முத்தாரம்மன் பீட சிறப்பு முன்பொரு காலத்தில் வியாபாரிகள் தோனிகளில் சரக்குகளை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருவது வழக்கம்.
ஒரு செட்டியார் தன் மனைவியுடன் குலசேகர பட்டின கடற்கரையில் சென்றபோது கடல் அலையால் அவருடைய சரக்குகள் கடலில் மூழ்கியது. வேதனையுற்ற செட்டியாரும், அவர் மனைவியும், சிவனை வேண்டினார்கள்.
சிவனும் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். "ஆண்டவனே எங்களுக்கு காட்சி தந்ததே நாங்கள் செய்த பாக்யம், நீங்கள் (சிவனும் பார்வதியும்) இருவரும், திருமண கோலத்தில் இதே போல் பக்தர்களுக்கு காட்சி தர வேண்டுகிறேன்" என்று வேண்டினார். இறைவனும் "அவ்வாறே ஆகட்டும்" என்று கோயில் பீடத்தில் காட்சி தருகிறார்.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சி:
குலசையில் 8 அம்மன்கள் உலகையே தன் கைக்குள் கொண்டுவர அசுரபலம் கொண்ட அரக்கன் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக கடுந்தவம் புரிகின்றான். சிவன் உடனே அந்த வரத்தை வழங்குகிறார், அசுரன் உடனே சிவனையே கொல்ல முற்படுகிறான். பார்வதி தேவி துர்கையாக மாறி அவனை அழிக்கிறாள்.
இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டுதான் 10ம் நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்காரம் செய்யும்போது கீழேவிழும் அசுரனின் தலையை துர்கை அம்மன் சிம்மவாகனத்துடன் தன் கையில் ஏந்துகிறாள்.
அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன் இரத்தத்தின் வழியாக மீண்டும் அசுரனாக உருவெடுக்ககூடாது என்று எண்ணிய துர்க்கை அம்மன் சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறிஞ்ச கட்டளையிட்டாள். அவ்வாறே உறிஞ்சிய துளிகள் கீழே விழும் போது காளியம்மனாக உருவெடுத்தாள்.
காளியம்மன்:
இங்கு கருங்காளி, பத்ரகாளி, சந்தியம்மன், அங்காளம்மன், தட்டத்தி அம்மன், பரமேஸ்வரி, வீராகாளி, அறம் வளர்த்த நாயகி அம்மன் 8 வகை காளி அம்மன்கள் குடியிருப்பது சிறப்பு அம்சமாகும். இதில் வீராகாளியம்மனுக்கு மட்டும் ஊருக்கு வெளியே ஆலயம் அமைந்துள்ளது. இப்படி பல வகையிலும் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் தசரா திருவிழாவை காண மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள்.
வேடம் சொல்லும் அம்மன் குலசை கோவிலில் தசரா பண்டிகையையட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கடவுளின் வேடங்களை அணிந்த படி வீதி உலாவாக செல்வர். காளி, ஆஞ்சநேயர், சிவன், முருகன்,விநாயகன் என பல்வேறு கடவுளைப் போல பக்தர்கள் வேடம் புனைந்து வருவது வேறு எங்குமே இல்லாத சிறப்பு.
வேடமணியும் பக்தர்கள்:
இப்படி வேடம் புனையும் பக்தர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வேண்டுதலுக்கான நேர்த்திக் கடனைத் தீர்க்கவே இப்படி வருகிறார்கள். அதே வேடத்தில் ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து அதை கோவிலில் செலுத்துகிறார்கள்.
பல்வேறு அவதாரங்கள் புனைந்து அம்மை, அப்பனைத் தரிசிக்கவும் வேண்டுதலைக் காணிக்கையாக்கவும், ஆண்டுதோறும் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படும். தசரா பண்டிகையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது.
விரதம் தொடங்கும் முதல் நாளின்போது குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பூசாரியிடம் ஆசி பெற்று காப்பு கட்டி கொள்வார்கள். அவர்கள் அணியும் வேடத்தை அவர்களே தீர்மானிப்பதில்லை.
அதற்கும் ஒரு வழிமுறை உள்ளது. முத்தாரம்மன் சந்நிதியில் முத்து போட்டுப் பார்க்கும் பூசாரிகள், ஒவ்வொரு பக்தரும் என்ன வேடம் அணிய வேண்டும் என அருள்வாக்காகச் சொல்கிறார்கள்.
அதன்படியே பக்தர்கள் வேடமணிந்து பத்து நாள் திருவிழாவில் பங்கு பெறுவர். பத்து நாள் வழிபாடு முடிந்ததும் கடலில் நீராடி விரதத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் சமீப ஆண்டுகளாக வேடத்தை அறிய பக்தர்கள் அருள்வாக்கு கேட்பது குறைந்து விட்டது.
மூர்த்தியின் சிறப்பு:
மூர்த்தம் என்ற சொல்லுக்கு உருவம் என்று பொருள். இறைவன் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் அமர்ந்து காட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றான். இங்கே அம்மையும், அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளனர். இப்போது நாம் வழிபடும் உருவுக்குக் கீழ் பாதத்தின் பக்கத்தில் தானே தோன்றிய சுயம்பு உருவத்தைக் காணலாம்.
அது சுயம்புவாகத் தானே தோன்றியது, உளி கொண்டு செதுக்காதது. வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரிஅம்மன், முத்தாரம்மன், உச்சினிமாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டி மறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் (எட்டு காளிகள்) ஆலயங்கள் அமைந்துள்ளன.
இந்த அட்டகாளிகளின் முதன்மையானதாகச் சிறந்து விளங்கும் தாய் முத்தாரம்மனாகும். இந்த அம்மனைத் தரிசித்து வந்தால் தரித்திரங்கள் விலகி அனைத்து நலன்களையும் பெறுவர்.
திருமேனி வடிவமைப்பு:
ஆலயத்தில் இப்போது வழிபடும் திருமேனியை எவ்வாறு பெரிய அளவில் வடிவமைப்பது? என்று பக்தர்கள் குழம்பிப் போயிருந்த சமயத்தில் அம்பாள் திருக்கோவில் அர்ச்சகர் கனவில் தோன்றி "மகனே, எனது உருவத்தை வேண்டுமெனில் குமரி மாவட்டம் மைலாடி என்னும் ஊருக்குச் செல்க" என்று கூறி மறைந்தாள்.
அதே சமயம் அம்பாள் சாமியுடன் மைலாடி ஊரில் சுப்பையா ஆசாரி என்பவர் கனவில் தோன்றி "மகனே எங்கள் வடிவத்தை உற்று நோக்கு. இவ்வடிவத்தை ஒரே கல்லில் ஒரே பீடத்தில் வடித்துக்கொடு. இக்கல் தென் திசையிலுள்ள ஆண் பெண் பாறையில் உள்ளது. குலசைப் பக்தர்கள் வருவர்.
அவர்களிடம் இப்பாறையிலுள்ள கல்லிலிருந்து வடித்தெடுத்த திருமேனியைக் கொடுத்தனுப்பு" என்று கூறி மறைந்தாள். அதன்படியே மைலாடி சென்று சிற்பி சுப்பையா ஆசாரியைச் சந்தித்து அவர்களால் வடித்தெடுக்கப்பட்ட திருமேனியை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இவ்வாறு இறைவனும் இறைவியும் தங்களின் திருமேனிகளை தாமே தேர்ந்தெடுத்த சிறப்பு மிக்கது இத்திருத்தலமாகும்.
தீர்த்தம்:
தீர்த்தங்களில் சிறந்தது கடல் தீர்த்தம், புண்ணிய நதிகள் அனைத்தும் கடலில் கலப்பதால் இதை மகா தீர்த்தம் என்பர். தீர்த்தத்தில் சிறந்த கடல் தீர்த்தமே இத்திருக்கோவிலுக்கு தீர்த்தமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கங்கை நதி கலக்கும் வங்கக்கடல் தீர்த்தமாக அமையப்பெற்றது மாபெரும் சிறப்பாகும்.
கங்கை நதி கலப்பதால் வங்கக்கடலைக் கங்கைக்கடல் எனவும் அழைப்பர். காசியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள காசி விசுவநாதர் - விசாலாட்சி ஆலயத்திற்கு கீழ்ப்புறம் தென்வடலாக கங்கை நதி உள்ளது.
இங்கும் இந்த ஆலயத்திற்குக் கீழ்ப்புறம் தென்வடலாக கங்கைக்கடல் என்னும் வங்கக்கடல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுங்கையில் தீராடி காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும் வழிபட்ட பயன் இங்குள்ள கங்கை கலக்கும் வங்கக்கடலில் நீராடி அன்னை முத்தாரம்மனையும் சுவாமி ஞானமூர்த்தீசுவரரையும் வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருக்கோவில் அமைப்பு:
அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தீசுவரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கின்றாள். அன்னையின் ஆலயம் மூன்று மண்டபங்களை உள்ளடக்கிச் சுற்றிலும் பிரகார மண்டபத்துடன் விளங்குகிறது. கர்ப்ப கிரகத்தில் சுவாமி அம்பாள் இருவரும் சுயம்பு மூர்த்திகளாக விளங்குகின்றனர்.
அம்பாள் திருத்தலையில் ஞானமுடி சூடி, கண்களில் கண்மலர் அணிந்து, வீரப்பல் புனைந்து, கழுத்தில் தாலிப்பொட்டும் மூக்கில் புல்லாக்கும் மூக்குத்தியும் தரித்து அழகுத் திருமேனியோடு விளங்குகின்றாள். அன்னை முத்தாரம்மனுக்கு நான்கு திருக்கைகளும், வலப்புற மேல் திருக்கையில் உடுக்கையும் - கீழ்த்திருக்கையில் திரிசூலமும் உள்ளன.
இடம்புற மேல் திருக்கையில் நாகபாசமும், கீழ்த் திருக்கையில் திருநீற்றுக் கொப்பரையும் தாங்கியுள்ளாள். சுவாமி ஞானமூர்த்தீசுவரருக்கு இரண்டு திருக்கைகள் மட்டுமே உள்ளன. வலப்புற திருக்கரத்தில் செங்கோல் தாங்கியுள்ளார். இடப்புறத் திருக்கையில் திருநீற்றுக் கொப்பரை ஏந்தியுள்ளார்.
அம்பாள் வலது திருவடியை மடக்கி இடது தொடையில் வைத்த நிலையிலும், சுவாமி இடது திருவடியை மடக்கி வலது தொடையில் வைத்த நிலையிலும் கருணை வெள்ளமாகிய ஞானபீடத்தில் அமர்ந்துள்ளனர். இத்திருமேனிகள் பிற்காலத்தில் நிறுவப்பட்டவை ஆகும்.
இத்திருமேனிகளுக்கு முன்னிலையில் சுவாமி அம்பாள் திருமேனிகள் சிறிய அளவில் உள்ளன. கர்ப்பகிரகத்தினை அடுத்து அர்த்தமண்டபமும் அதனை அடுத்து மகாமண்டபமும் உள்ளன. இம்மகாமண்டபத்தில் பேச்சியம்மன், கருப்பசுவாமி, பைரவர் ஆகியோர் திருமேனி கொண்டுள்ளனர். மகாமண்டபத்தின் வலப்பக்கம் பேச்சியம்மனும், இடப்பக்கம் கருப்பசாமியும் வடதிசை நோக்கியுள்ளனர்.
பைரவர் தெற்குமுகமாக சன்னதியை எதிர்நோக்கி நிற்கிறார். மகாமண்டபத்தினை அடுத்து கொடிமர மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் நடுவில் 32 அடி உயரக் கொடிமரம் செப்புத் தகடுகளால் வேயப்பட்டுக் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.
கொடிமரத்தின் அடிப்புறச் செப்புத் தகட்டில் வடபுறம் சுவாமியும் அம்பாளும், தென்புறம் அஸ்திர தேவரும், கீழ்ப்புறம் விநாயகரும், மேற்குப் பகுதியில் பாலசுப்பிரமணியரும் திருவுருவம் தாங்கி உள்ளனர். இம்மண்டபத்தின் கன்னிமூலையில் மகா வல்லப விநாயகர் கிழக்குத்திசை நோக்கியும், தென்புறத்தில் இரு பூதத்தார்களும் திருமேனி கொண்டுள்ளனர்.
இத்திருக்கோவிலுடன் இணைந்த அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோவில் குலசேகரன்பட்டினத்தில் வங்கக்கடல் அலைகள் முத்தமிடும் அழகிய கடற்கரைப் பக்கத்தில் கடற்கரை நோக்கி அமைந்துள்ளது. சிவகாமி அம்பாள் உடனாய சிதம்பரேசுவரரைத் தரிசிக்கும் போது தில்லையில் நடனமாடும் நடராச பெருமானைத் தரிசித்துக் கிடைக்கும் பலன் கிடைக்கும் என்று இம்மூர்த்தியின் பெருமையை உணர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இத்திருக்கோவிலுடன் இணைந்த அருள்மிகு விண்ணவரம் பெருமாள் திருக்கோவில் குலசேகரன்பட்டினம் ஊருக்கு வடக்கு எல்லையில் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி உடனோடு அமர்ந்திருந்து விண்ணவரம் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.
ஆலய வழிபாடும் விழாக்களும்:
நாள் வழிபாடு:
இத்திருக்கோவிலில் தினசரி 4 கால பூசை நடைபெறுகிறது. முற்பகலில் காலசந்தியும், பகலில் உச்சிக்காலப் பூசையும், மாலையில் சாயரட்சை பூசையும், இரவில் இராக்காலப் பூசையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
வார வழிபாடு:
பிரதி செவ்வாய் தோறும் சிறப்புப் பூசை நடைபெறுகிறது. பிரதி வெள்ளி தோறும் முற்பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை இராகுகால வழிபாடு மகளிரால் நடத்தப்படுகிறது.
மாத வழிபாடு:
தமிழ்மாதக் கடைசிச் செவ்வாய் தோறும் மாதாந்திர விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய இரவில் அன்னை முத்தாரம்மன் திருத்தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள்.
பௌர்ணமி தோறும் திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. திருவிளக்கு வழிபாட்டில் மகளிர் 108 நபர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுகின்றனர்.
ஆண்டு வழிபாடு:
சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு இரவில் அன்னை திருத்தேரில் திருவீதியுலா எழுந்தருளுகின்றாள்.
மாத விழாக்களும், பெருவிழாவும்:
தமிழ்ப்புத்தாண்டு (சித்திரை விசு) அன்று சிறப்பு வழிபாடுகளும் அலங்காரத் தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
ஆடிமாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமை கொடை விழா கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் இரண்டாம் செவ்வாய் இரவில் முளை இடும் விழாவும், அதனைத் தொடர்ந்து திங்களில் மாக்காப்பும், செவ்வாயில் கொடை விழாவும், புதனில் மஞ்சள் நீராட்டு விழாவும் நடை பெறுகின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |