ராகு- கேது தோஷத்திலிருந்து விடுபட இந்த பரிகார தலங்களுக்கு சென்று வழிபடுங்கள்
பாம்பின் உடல் குணத்தால் ராகுவின் வாலிலும், பாம்பின் தலையானதால் கேதுவின் தலையிலும் விஷம் உள்ளது. இந்த அடிப்படையில் கால சர்ப்ப தோஷம் அமைகிறது.
சர்ப்ப தோஷம் என்பது திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் தடைகள் ஏற்படுகின்றன. அவற்றில் இருந்து விடுபட பலரும் பலவிதமான பரிகாரங்களை செய்கின்றனர்.
ஒருவேளை உங்களுக்கும் ராகு-கேது தோஷம் இருந்தால் அவற்றில் இருந்து விடுபட இந்த தலங்களுக்கு சென்று வாருங்கள்.
ஸ்ரீகாளஹஸ்தி
சென்னையிலிருந்து 110 கி.மீ தொலைவிலும் திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இந்த கோயில் புகழ்பெற்ற ராகு-கேது தலமாக திகழ்கிறது. இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம் உள்ளது. அதனாலேயே சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இந்த கோயில் மூடப்படுவதில்லை. மற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
ராகு-கேது ராசி மண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றுப்பாதையும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது. எல்லா நாள்களிலும் ராகு-கேது தோஷதிற்கான வழிபாடு நடைபெறுகிறது. அவற்றுள் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) சிறப்பு பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.
ராமேஸ்வரம்
ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடிவிட்டு கோயிலில் உள்ள 21 தீர்த்தங்களிலும் நீராடினாலே ஒருவர் செய்த அனைத்து பாவங்களும் நீங்கி விட்டதாக மக்கள் கருதுகின்றனர். ராகு, கேது தோஷமுள்ளவர்கள் நடராஜர் சன்னதி மற்றும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் எரியும் விளக்கில் நெய்விட்டு வழிபட்டால் தோஷம் நீங்கி விடுகிறது. இங்கு நடராஜர் சன்னதியைச் சுற்றிலும் நாகப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கடற்கரையில் கும்பம் வைத்து பூஜை நடத்தி அர்ச்சகர்களால் தரப்படும் நாகர் சிலையை இந்த சன்னதியில் பிரதிஷ்டை செய்கின்றனர். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் தாங்கள் வைத்த நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்கின்றனர். சிலையினை அடையாளம் தெரிந்துகொள்ள பொறித்து வைக்கின்றனர்.
திருச்சிறுப்புலியூர்
மயிலாடுதுறை - காரைக்கால் சாலையில் செம்மங்குடி அருகில் திருச்சிறுப்புலியூர் உள்ளது. பாம்புகளின் தலைவனான ஸ்ரீஆதிசேஷன், இத்தலபெருமாளை வணங்கி அனைத்து வரங்களையும் பெற்றார். அவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் தனி சன்னதி கொண்டு "என்னை விட்டுப் பிரியாமல் என் அருகிலேயே இரு' எனக் கூறி ஆசீர்வதித்தார். இங்குள்ள ஆதிசேஷனை வணங்கினால் வழக்கில் வெற்றி, பூர்வீகச் சொத்து பிரச்னை தீரும், செல்வம் சேரும்.
நயினார் திருக்கோயில்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள நயினார் கோயில் பிரகாரத்தில் புற்றடி அமைந்துள்ளது. இந்த புற்றில் நாகராஜர் வசிக்கிறார். இவருக்கு முட்டை, பால், பழம் படைக்கின்றனர். இங்கு வந்து வழிபாடு செய்வதன் மூலம் கேது தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
கோடக நல்லூர்
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் நாகப்பாம்பான கார்கோடகனுக்கு நாராயண பெருமான் காட்சி கொடுத்ததால் "கார்கோடக தலம்' என அழைக்கப்பட்ட இந்த தலமானது தற்போது "கோடகநல்லூர்' என அழைக்கப்படுகிறது.
ராகுவினால் ஏற்படும் தோஷத்திற்கு நாகேஸ்வர தரிசனமும், கேதுவினால் ஏற்படும் தோஷத்திற்கு காளஹஸ்தியும் முக்கியமான தலமாக விளங்கும் அதே வேளையில், இவ்விரு தலங்களிலும் செய்த பரிகாரங்களால் தீர்க்க முடியாத தோஷங்களையும் இந்த கார்கோடக தலம் தீர்த்து வைக்கிறது.
திருப்பாம்புரம்
கும்பகோணம் - காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்னும் கிராமத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்பாம்புரம் அமைந்துள்ளது. ராகு, கேது தலங்களான ஸ்ரீகாளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய தலங்களின் பெருமைகள் ஒரு சேர இந்த தலத்தில் அமைந்துள்ளது. ராகு-கேதுவுக்கு என இங்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது. ராகுவும், கேதுவும் இந்த தலத்தில் வந்து வழிபாடு செய்து சாப விமோச்சனம் பெற்றனர் என்ற வரலாறும் உள்ளது.
காலசர்ப்ப தோஷம், ராகு-கேது தசை, , களத்திரதோஷம், புத்திரதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சாந்தி பரிகாரம் செய்கின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மல்லிகை மணம், தாழம்பூ மணம் வீசும் நேரங்களில் எங்கேனும் ஓரிடத்தில் பாம்பு தென்படுகிறது. தோஷங்களில் இருந்து விடுபட செவ்வாய்-வெள்ளி-ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜை செய்வது சிறப்பானதாகும். தற்போது வரை இந்த ஊரில் உள்ள அத்தி மரங்கள் பூத்ததில்லை. ஆல மர விழுதுகள் தரையைத் தொட்டதில்லை. ஒருவர் கூட பாம்பு தீண்டி இறந்தது இல்லை என்பது மாபெரும் சிறப்பாகும்.
பரமக்குடி சக்கரத்தாழ்வார்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அருகில் அனுமார் கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வார் ராகு தோஷத்தைத் தீர்த்து வைக்கிறார்.
நாகதீர்த்தக் கோயில்
புதுக்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் நாகதீர்த்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 10 தலையுடன் கூடிய பஞ்சநாகர் சிலை அமைந்துள்ளது. இதில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக எழுந்தருளியுள்ளனர். நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் இந்த ஈசனை வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.
பௌர்ணமி நாளில் இக்கோயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இங்கு அமைந்திருக்கும் ராக்காயி அம்மன் சிலையில் இருந்து நாகமலை ஊற்றுத் தண்ணீர் வந்து விழுகிறது. இங்கு சென்று வணங்கினால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
காளி கோயில்
சிதம்பரம் தில்லைகாளி, உறையூர் வெக்காளி, சிவகங்கை வெட்டுடையகாளி, மடப்புரம் பத்திரகாளி போன்ற கோயில்களில் வீற்றிருக்கும் காளி அம்மனை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருளை பெறலாம்.
மணக்கால் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர்
திருவாரூர்-கும்பகோணம் பாதையில் பட்டீஸ்வரத்திற்கு அருகில் மணக்கால் தலம் அமைந்துள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தின் மீது பாம்பு ஊர்ந்த தழும்பை இன்று நீங்கள் சென்றாலும் காண முடியும். ஸ்ரீ சேஷபுரீஸ்வரரை வணங்கினால் தோஷத்தில் இருந்து விடுபடுவதோடு அரசு காரியங்கள் யாவும் வெற்றி அடையும். நல்ல வேலை கிடைக்கும்.
நாகர்கோவில்
இங்குள்ள நாகநாதர் கோயில் நாகராஜன் மிகவும் விஷேசமானவர். இங்குள்ள நாகநாதர் ஆயில்ய நட்சத்திரத்தின் தேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.
திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் ஆதிசேஷன் மேரு மலையை அழுத்திப் பிடித்துக் கொள்ள வாயு பகவான் தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்ற பந்தயம் ஏற்பட்டது. இதன்படி வாயு பகவான் வேகமாக காற்றினை வீச மலையின் முகட்டுப் பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களில் விழுந்தன. இதனால் ஆதிசேஷனின் உடலில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறிய ரத்தத்தினால் மலை செந்நிறமாக மாறியதாக நம்பப்படுகிறது.
இம்மலைக்கு நாக கிரி, வாயு மலை என்ற வேறு பெயர்களும் உள்ளன. 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோயில் படிக்கட்டு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. நாக தோஷம், ராகு தோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.
நாகூர் ஸ்ரீநாகநாதர்
நாகர் ஊர் எனப்படும் நாகூரில் வீற்றிருக்கும் அருள்மிகு நாகவள்ளி உடனுறை ஸ்ரீநாகநாதரை வணங்குங்கள். ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள் பெற்ற திருத்தலமே நாகூர் ஆகும். இங்கு வழிபாடு செய்தால் திருமண யோகம் கைகூடி வரும். அதோடு இந்த தலத்தில் உள்ள ஈசனை வணங்கினால் பெரிய பதவிகளும் கிடைக்கும்.
கொழுவூர் நாகநாதர்
ராமநாதபுரம் மாவட்டம் கொழுவூர் நாகநாதர் திருக்கோயிலில் புற்றிலிருந்து ஏராளமாக மண் கொட்டுகிறது. இதனை உடனுக்குடன் சுத்தம் செய்து விடுகிறார்கள். புற்று உடைந்து போய் ஒழுங்கற்ற நிலையில் உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் தரும் முட்டையை இரவு 7 மணிக்கு மேல் மொத்தமாக படைத்துவிட்டு நடையை அடைத்து விடுகிறார்கள்.
மறுநாள் நடை திறந்தவுடன் முட்டைகள் உடைந்து கிடக்கின்றன. இக்கோயில் காலை 6 மணி முதல் திறந்திருக்கும். பக்தர்கள் எந்த நேரத்தில் வந்தாலும் நடை திறந்திருக்கும். சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபாடு செய்வதன் மூலம் அதில் இருந்து விடுபடலாம்.
சாலிகிராமம் நாகாத்தம்மன்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். கோயிலுக்கு எதிரில் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வெள்ளிக்கிழமகளில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு வழிபட்டால் நாகதோஷத்தால் உண்டாகும் தீயபலன்கள் குறைந்து நற்பலன் கிடைக்கும்.
அம்மனை தரிசித்து உங்கள் குறைகளைக் கூறி அதை நிவர்த்தி செய்யுமாறு வேண்டிக் கொண்டினால் உங்கள் வேண்டுதல் விரைவில் தீரும். திருமணம் தாமதப்படுபவர்கள் அம்மனுக்கு வேண்டிக் கொண்டால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
சென்னை திருவொற்றியூர் ஆதிசேஷன்
ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீவடி வுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்கினால் ராகு கேதுவால் உண்டான தோஷம் விலகும்.
கும்பகோணம்
மயிலாடுதுறை இடையே உள்ள கதிராமங்கலத்தின் வனதுர்க்கை அம்மனை நவமி திதி அன்று வழிபாடு செய்யும் போது ராகு பகவானால் உண்டான அனைத்து தீமைகளும் விலகும்.
காஞ்சிபுரம் சித்ரகுப்தன்
சித்ரகுப்தன் கேதுவுக்கு அதிதேவதையாக விளங்குகிறார். இவருக்கு காஞ்சிபுரம் அருகே தனி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சென்று கொள்ளு 200 கிராம், உளுந்து 200 கிராம், சித்திரவண்ணத் துணி ஒன்றரை மீட்டர் வைத்து அர்ச்சனை செய்து துணியை ஆலயத்திலேயே அர்ப்பணித்துவிட்டு, உளுந்தையும், கொள்ளையும் பால்தரக்கூடிய பசுவுக்குக் கொடுக்க வேண்டும். இந்தப் பரிகாரம் செய்வதால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்பது நீண்டகால ஐதீகமாக உள்ளது.
சிவகங்கை
அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன் ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபட்டால் ராகு மற்றும் கேதுவால் உண்டான அனைத்து தீமைகளும் விலகும்.
நீலகண்ட நாயகேஸ்வர்
விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள நாகேந்திரபட்டினம் ஊரில் வீற்றிருக்கும் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்கினால் ராகு மற்றும் கேதுவால் உண்டான அனைத்து தோஷங்களும் விலகும்.\
அருள்மிகு முண்டகக்கன்னி அம்மன் கோயில்
சென்னை மயிலாப்பூரில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டு வரும் போது ராகு கேதுவினால் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |