2026: அட்சய திருதியை எப்பொழுது? அன்றைய நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய இந்து மத பண்டிகைகளில் அட்சய திருதியை மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அட்சய என்ற சொல்லிற்கு அள்ள அள்ள குறையாத மற்றும் முடிவில்லாத பொருள் என்பதாகும்.
அதனால் அட்சய திருதியை நாளில் மந்திரங்கள் ஜெபம் செய்வது, தானம் வழங்குவது, ஹோமங்கள் வளர்ப்பது, சுப காரியங்கள் நிகழ்ச்சிகள் தொடங்குவது ஆகியவற்றுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
அப்படியாக 2026 ஆம் ஆண்டு அட்சய திருதியை எப்பொழுது? அன்றைய நாளின் சிறப்புகள் மற்றும் அன்றைய நாள் நம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

2026 அட்சய திருதியை எப்பொழுது:
இந்த 2026 ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:49 மணிக்கு துவங்கி ஏப்ரல் 20 காலை 7. 27 மணி வரை இருக்கிறது. அதனால் இந்த நாளில் தங்கும் வாங்க விரும்புபவர்கள் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 10:49 மணி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி காலை 6.14 மணி வரை வாங்கலாம்.
அட்சய திருதியை சிறப்புகள்:
ஒரு யுகம் முடிந்து புதிய யுகம் துவங்கும் காலச்சக்கரத்தின் சுழற்ச்சியாகவே இந்த நாள் பார்க்கப்படுகிறது. இந்த அட்சய திருதியை தினத்தில் தான் சத்ய யுகம் முடிந்து திரேதா யுகம் துவங்கியதாக சொல்லப்படுகிறது.
மேலும் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதாரம் தோன்றியதும் இந்த அட்சய திருதியை நாளில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு தன்னுடைய முன்னோர்கள் மோட்சம் அடைவதற்காக பகீரதன் கடும் தவம் இருந்து கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்ததும் இந்த தினத்தில் தான்.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த பொழுது அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை வழங்கிய நாளும் இந்த நாள் தான்.
துவாரகையில் பகவான் கிருஷ்ணரை சந்தித்து வறுமையில் இருந்த சுதாமா ஒரு பிடி அவலை பரிசாக கொடுத்து அளவில்லாத செல்வத்தை பெற்று குசேலராக உயர்ந்ததும் இந்த அட்சய திருதியை நாளில் தான்.
அதனால், அட்சய திருதியை நாளில் நாம் லட்சுமி நாராயணனை வழிபாடு செய்வதும் செல்வத்திற்கு அதிபதியான குபேரரை வழிபாடு செய்வதும் கங்கை மற்றும் புனித நீர்களில் நீராடுவதும் மிகச்சிறந்த பலன்களை நமக்குப் பெற்றுக் கொடுக்கும்.
அதே போல் ஹோமங்கள் நடத்துவது, வேதங்கள் படிப்பதும் சிறந்தது. அன்றைய நாளில் தங்கம் மற்றும் வெள்ளி அல்லது புதிய பொருட்கள் வாங்குவதால் செல்வம் இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் திருமணம் மற்றும் சுப காரியம் நிகழ்ச்சிகளும் கட்டாயம் செய்யலாம். இந்த நாளில் நாம் கட்டாயம் தானம் செய்வதால் நமக்கு புண்ணியம் சேர்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |